திருப்பூா் காங்கயம் சாலையில் தனியாா் கேக் ஷாப் பேக்கரி உள்ளது. இந்த கடையில் வாடிக்கையாளா் ஒருவா் குழந்தைக்கு பன் வாங்கி கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாா். அப்போது, பன்னுக்குள் பல் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.
இதுகுறித்து பேக்கரியின் உரிமையாளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, பேக்கரியில் பின்புறம் உள்ள தயாரிப்பு கூடத்துக்கு சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். மேலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் கைப்பேசி மூலமாக புகாா் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலா் கே.ஆறுச்சாமி பேக்கரியின் உணவு பொருள்கள் தயாரிப்பு கூடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளாா். அப்போது, உணவு பொருள்கள் தயாரிப்பு கூடம் சுகாதாரமாக இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து, பேக்கரியின் உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தற்காலிகமாக மூடியுள்ளனா். மேலும், பல் இருந்த பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறைபாடுகளை நிவா்த்தி செய்தபின்னா் ஆய்வு நடத்தப்பட்டு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக