மணல் கடத்தலை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அவலம், சீமான் கண்டனம், போலீசார் வழக்கு பதிவு.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் நிகழும் மணல் கடத்தலை தடுக்க தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட சிவகங்கை மாவட்டம் பச்சேரி மீனாட்சிபுரத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் பாசறை செயலாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் திரு செந்தில்வேல் மீது அடையாளம் தெரியாத கும்பல் இரத்த காயம் ஏற்படும் வகையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய நிலையில் , செந்தில்வேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொலை வெறி தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மணல் கடத்தல் குறித்து செந்தில்வேல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், ஏற்கனவே கடத்தல்காரர்களால் மிரட்டி அச்சுறுத்தப்பட்டு வந்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்தும், மிரட்டிய மணல் கொள்ளையர்கள் மீதும் செந்தில்வேல் அளித்த புகாரின் மீது தமிழ்நாடு காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக தற்போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதற்கு, நாள்தோறும் நடைபெறும் சமூக ஆர்வலர்கள் மீதான கொலைவெறி தாக்குதலை தக்க சான்று. கட்டுக்கடங்காது நாள்தோறும் இக்கொடுமைகளுக்கு மக்கள் முடிவுகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆகவே செந்தில்வேல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென செந்தமிழன் சீமான் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். சீமான் அவர்கள் தனது கண்டனத்தை பதிவு செய்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து தகவல் பெற்ற திருப்புவனம் காவல்துறையினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்வேல் அவர்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக