திருச்சினம்பூண்டி சித்தேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.
திருக்காட்டுப்பள்ளி, ஏப்.14: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி சித்தாம்பிகை உடனுறை ஸ்ரீசித்தேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமைஇரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சித்தேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆகும். இக்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருக்கானூரை மையமாகக் கொண்டு திருக்கானூர், திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநியமம், திருச்சினம்பூண்டி ஆகிய ஏழுர் சிவன் கோவில்களை உள்ளடக்கி சத்தஸ்தான (ஏழூர்) திருவிழா நடைபெற்ற சிறப்புடையது. இக்கோயிலில் தினசரி வழிபாடுகளும், பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு வழிபாட்டில் சுவாமி, அம்மனுக்கு பால், தயிர்,தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புது வஸ்திரம் சாற்றி,புஷ்ப அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமிக்கு சிவபுராணம், கடை முடி பதிகம் பாடியும்,அம்மனுக்கு சகஸ்ரநாம பாராயணம் செய்தும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா செய்தியாளர் ஜே.ஜேசுராஜ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக