அமைச்சர் முத்துசாமியை பவானி நதி கூட்டு இயக்கத்தினர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என 4 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக பவானி நதி விளங்கி வருகிறது. இந்த நதி நீரை பல லட்சக்கணக்கான மக்கள் குடிநீராகவும், வேளாண்மைக்கும், கால்நடைகளுக்கும் பயன்படத்தி வருகின்றனர்.
ஜீவநதியான பவானி நதி நீர், ஆலைக் கழிவுகளால் மாசடைந்து தண்ணீர் நிறம் மாறி, துர்நாற்றம் வீசி வந்தது. இந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆளானார்கள். தமிழ்நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள ஒன்றாக ஈரோடு மாவட்டமும் மாறி வருகிறது.
இந்நிலையில், பவானி நதியை பாதுகாக்க சத்தியமங்கலத்தில் அனைத்து கட்சி, மற்றும் பொதுநல அமைப்புகள் ஒன்று கூடி, 2023 ஆம் ஆண்டு, பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு, 2023 ஆம் ஆண்டு ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினத்தில் 10 ஆயிரம் பேர், பவானிசாகரில் கூடி, ஆலைக் கழிவுகளால் பவானி நதிநீர் மாசடைவதை கண்டித்து, மாபெரும் போராட்டத்தை பவானிசாகரில் நடத்தியது. சமீப நாட்களுக்கு முன் கோவை மாவட்டம், சிறுமுகை மற்றும் ஆலாந்துறை பகுதியில் நீரின் நிறம் ஆரஞ்சு நிறமாக மாறியதையும், கோவை மாவட்ட நிர்வாகம் குடிநீரை பயன்படுத்துவதை தடை செய்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி மீண்டும் பவானிசாகரில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், அணையில் நீர் மட்டம் குறைந்துள்ள கடந்த சில தினங்களாக, மீண்டும் பவானி நதிநீர் ஆரஞ்சு நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே, பவானி நதி நீரை மாசு ஏற்படுத்தும் ஆலைகள் மற்றும் நகராட்சி, உள்ளாட்சிகளின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக