ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அப்போது ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் போலீசாரிடம் கூறும்போது, தனது பெயர் வரலட்சுமி என்றும், தனது கணவர் பெயர் அய்யப்பன் என்றும் கூறினார். கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஈரோடு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் தனக்கும் தனது மகளுக்கும் மாதம் தலா ரூ. 5 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தனது கணவர் ஜீவனாம்சம் வழங்காமல் இருந்துள்ளார்.
2019ம் ஆண்டு அய்யப்பனை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டும் காவலர்கள் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும், கணவரை விட்டுப் பிரிந்து வாழ்வதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக