மகளிர் சுய உதவி குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழக அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
உதகை வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்று நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உதகை குடிமைபொருள் தனி வட்டாட்சியர் மகேஸ்வரி, குந்தா வட்ட வழங்கல் அலுவலர் கோபிநாத், மாவட்ட வழங்கல் அலுவலக நுகர்வோர்பிரிவு வருவாய் அலுவலர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பயிற்சியை துவக்கி வைத்து பேசும்போது நுகர்வோர் உரிமை பெறுவதற்கு பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு உரிமைகள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவில் 1986 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. நுகர்வோர் நலன் கருதி பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டு இருந்தாலும் நுகர்வோர்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நுகர்வோர் சார்ந்த வழக்குகள் நடத்துதல், நுகர்வோர் சார்ந்த குறைகளை அரசுக்கு தெரிவித்தல் என நுகர்வோர் உரிமைகளுக்கு நுகர்வோர் அமைப்புகள் உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. தற்போதைய நுகர்வு கலாச்சார உலகில் தேவை விட அதிகமாக பொருட்களை வாங்குகின்றோம். பணம் கொடுத்து வாங்கும்போது உள்ள மகிழ்ச்சி தற்போது இல்லை. இஎம்ஐ, கிரெடிட் கார்டு மற்றும் கடன் மூலமாக தேவையில்லாத பொருட்கள் வாங்க தூண்டுகிறது. நீண்ட பயன்பாடு இவற்றில் இருப்பதில்லை. பொருளின் மதிப்பும் முழுமையாக நாம் உணர்வதில்லை. எந்தப் பொருள் வாங்கினாலும் சரியான தரம் உள்ளதா என்பதை குறித்து அறிந்து வாங்க வேண்டும். வரவுக்கும் செலவு உள்ள வேறுபாடுகள் கணக்குகள் அறிந்து கொள்வது அவசியமாகிறது. பல்வேறு அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள் என பலவும் விளம்பரங்கள் மூலம் மக்களிடையே திணிக்கப்படுகிறது. இவற்றின் உண்மைதன்மை குறித்து அறிந்து கொண்டு வாங்க வேண்டும். மகளிர் குழு நிர்வாகிகள் இங்கு கற்று கொண்டதை மகளிர் குழு உறுப்பினர்களிடம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் தமிழகம் செய்யப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 புத்தகம் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வெளியிட்டார்.
தொடர்ந்து கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் ஆகியோர் நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் கடமைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் சிறப்புகள், உணவு கலப்படம் அறிதல், அயோடின் உப்பு அவசியங்கள், ஊட்டசத்து உணவுகள், சுகாதாரம், சேமிப்பு உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் உதகை ஊராட்சி ஒன்றிய அளவிலான மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 100 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக