வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
பேராவூரணி, பிப்.21 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சன்மதி வழிகாட்டுதலில்
நடைபெற்றது. தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் கிராமப்புறத் தங்கல் வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ் பங்கேற்றனர்.
இதில், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் திவ்யா பங்கேற்று தொழில்நுட்ப உரையாற்றினார். அப்போது விவசாய பணிகளில் சூரிய ஆற்றலின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்தும், வேளாண் பொறியியல் துறை சார்ந்த அரசு மானிய திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு, விவசாயத்தில் சூரிய சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது, சூரிய சக்தியால் இயங்கும் பாசன முறை, மின்சாரம் மற்றும் டீசல் மோட்டார்களுக்கு மாற்றாக சூரிய ஒளி பம்புகளை பயன்படுத்துவது, மாடுகள் மற்றும் கோழிப் பண்ணைகளில் சூரிய ஆற்றல், பால் குளிரூட்டுதல் மற்றும் கோழிக்குஞ்சு வளர்ப்பு தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் பாண்டியன், ஆத்மா திட்ட அலுவலர்கள் முருகானந்தம், ரமேஷ், அமிர்தலீலியா ஆகியோர் செய்திருந்தனர்.
பேராவூரணி த.நீலகண்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக