தூத்துக்குடி டூவிபுரம் 8வது தெருவில் கேரளாவை தலைமை இடமாக கொண்ட கோல்டு லோன் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 24ஆம் தேதி இரவு பணிகளை முடித்துவிட்டு பூட்டி விட்டு சென்று விட்டனர். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அங்குள்ள அலாரம் வயர் துண்டிக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமி அலாரம் வயரை துண்டித்து விட்டு பூட்டை உடைக்க முயற்சி செய்து உள்ளார். பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்துள்ளது. இதனால் நிதி நிறுவதனத்தில் இருந்த ரூ.3கோடி மதிப்பான நகை மற்றும் பணம் தப்பியது. இதுகுறித்து நிதி நிறுவன மேலாளர் ஸ்டீபன் ஏசுதாசன் மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்தார்.
மேலும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்குள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது அதில் ஒரு வாலிபரின் உருவம் பதிவாகி உள்ளது. போலீசாரின் விசாரணையில் அவர் தூத்துக்குடி சோரீஸ் புரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் செந்தூர்பாண்டி (36) என்பது தெரியவந்தது.
இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்ததாகவும் இவர் மீது 6 கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக