தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.2.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 15.08.2024 அன்று நிகழ்த்திய சுதந்திர தினவிழா உரையில், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாலும் அதிக செலவுகள் ஏற்படுகின்றன.
இதற்கு தீர்வாக பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும், இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் மானியம் மற்றும் தேவையான கடனுதவி அரசால் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 1000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழில் முனைவோருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் மானியமாக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவைப்படும் மருந்துகளில் ஜெனிரிக் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமும், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகளை டாம்ப்கால் மற்றும் இம்காப்ஸ்-இடமிருந்து கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலமாகவும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில் மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மருந்தக மென்பொருள் பயிற்சி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மருந்தகங்கள் பராமரித்தல் குறித்த பயிற்சி, மருந்து ஆய்வாளர்கள் மூலம் ஆவணங்கள் பராமரிப்பு பயிற்சி மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் மருந்தகங்களுக்கு நேரடியாக அழைத்து சென்று களப்பயிற்சி உட்பட மூன்று கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் நடத்தும் அனைத்து முதல்வர் மருந்தகங்களுக்கும் 1.50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெனிரிக் மருந்துகளை மானியமாகவும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 1.50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகள் உட்பட இதர மருந்துகளையும் முதற்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், B.Pharm/D.Pharm படித்த பட்டதாரிகள் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதன்மூலம் தனியார் மருத்துவமனை / மருந்தகங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலிருந்து வாங்கி பயன் பெற முடியும்.
முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முதல்வர் மருந்தகங்கள் அமைத்திட பயனாளிகளுக்கு மூலதனக் கடன் மற்றும் முதல்வர் மருந்தகத்திற்கான அரசு மானியம் வழங்கினார்.
காணொலிக் காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக