மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு

 

IMG-20250121-WA0002

மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில்    அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.


நீலகிரி மாவட்டம் மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  சசிகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே. ராஜு அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தக் கருத்தரங்கின் போது மாணவர்களுக்கு கூறப்பட்ட கருத்துக்கள்.....


 கடந்த 300 ஆண்டுகளில் அறிவியலின் வளர்ச்சி இந்த உலகத்தையே புரட்டிப்போட்டு உள்ளது என்று கூறலாம். கலிலியோ முதன் முதலில் கோள்கள் யாவும் சூரியனையே சுற்றி வருகின்றன என்று அறிவித்த நாள் முதல் இன்று வரை  பிரபஞ்சம் ஒன்று மட்டுமல்ல பல கோடி கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன. 


ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான இயற்பியல் விதிகள் இருக்கலாம் என கண்டறியப்பட்டு வானியல் விரிவடைந்துள்ளது. மனித இனம்  ஒரு குறுகிய காலத்தில் படைக்கப்பட்டது என்று மக்கள் நம்பிய காலத்தில்  டார்வின் தனது பரிணாமக் கொள்கையின் மூலம்  மனித குலம்  குரங்கு குடும்பத்தில்  ஒரு கிளையாக தோன்றியது தான்  என்று கண்டறிந்த நாள் முதல் இன்றைய மரபணு கண்டுபிடிப்புகள்  புதிய உயிரினங்களை ஆய்வகத்திலேயே உருவாக்கலாம்  என்பது வரை வளர்ந்துள்ளது. புரிந்து கொள்ள முடியாத மிக சிக்கலான  மனித மனத்தை சிக்மன்ட் பிராய்டு  விளக்கிக் கூறினார். அதன் விளைவாக இன்று மனமும் மனித மூளையின் ஒரு சிறு பகுதியின் செயல்பாடு தான் என அறிவியல் கண்டறிந்துள்ளது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அன்று மனித ஜாதியின் துயரம் யாவையும் மனதினால் வந்த நோயடா  என்று பாடல் எழுதினார். இன்று அந்த நோய்க்கும் மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றைய காலநிலை மாற்றத்தை அறிவியல் துல்லியமாக கண்டறிந்துள்ளது. அதன் தாக்கத்தை குறைக்கும் வகையில் அதிக அளவு கார்பனை உட்கொள்ளும் அதிக பரப்பளவு உள்ள இலைகளை கொண்ட தாவரங்களை மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து உள்ளது. மருத்துவத்துறையில்  ஒவ்வொரு தனி மனிதனும் சிறப்பான தன்மை கொண்டவர் என்ற வகையில் அவரது மரபணுவை கொண்டு தனிப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து கொடுக்கும் அறிவியல் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. நவீன தொழில் நுட்பமான ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்  மனித மூளையில் உள்ள 10,000 கோடி நியூரான்களின் செயல்பாடுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் இன் தந்தை எனப்படும் ஹின்டன் அவர்கள் அண்மையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பது அணுகுண்டு கண்டுபிடிப்புக்கு இணையானது என்று கூறியுள்ளார். இந்த செயற்கை நுண்ணறிவு  மனித மூளையை விட  சிறப்பானதா இதனால் மனித குலத்திற்கு  வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்படுத்துமா  என்பன போன்ற பல கேள்விகளுக்கு  அவர் ஆம் என்றே பதில் அளித்துள்ளார். 


ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மனித குலத்தின் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்று பெரும் அளவில்  ராணுவத்திற்கு பயன்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று கூறுகிறார். மாணவர்கள் வளர்ந்து வரும்  அறிவியல் துறைகளைப் பற்றி  அறிந்துகொண்டு  என்ன படிக்க வேண்டும்  எந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என புரிந்து கொண்டு  தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு கூறினார். முன்னதாக முதுகலை ஆசிரியர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்  நாகராஜன் நன்றி கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad