தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, ஜன.24, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேர்தலின்போது இளம் வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதே இந்த தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஆகவே தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தலின்போது வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கீழ் கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அதன்படி இன்று (24.01.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
"மக்களாட்சி மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம்" என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் ஆய்வாளர் ஜெரால்டுவின், தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணிய பெருமாள், உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக