தூத்துக்குடி - 400 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 50 லட்சம் பணம் மோசடி - பெண் உட்பட 2 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 நவம்பர், 2023

தூத்துக்குடி - 400 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 50 லட்சம் பணம் மோசடி - பெண் உட்பட 2 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடியில் தங்க நகைகளை அடகுவைத்து அதிக லாபம் பெற்று தருவதாக கூறி 400 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல் பணம் மோசடி செய்த பெண் உட்பட 2 பேர் கைது - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.


தூத்துக்குடி முத்தையாபுரம் எம். சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ராஜரீகம் (54) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி சுப்புலெட்சுமி (எ) கவிதா (31) என்பவர் தான் செபத்தையாபுரம் பகுதியில் ஒரு தனியார் கிளப்பில் நிர்வாகியாக இருப்பதாகவும், செழிய நங்கை என்ற பெயரில் மகளிர் குழுவை நிர்வகித்து வருவதாகவும் அதனால் தனக்கு பல அரசியல் பிரமுகர்களையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் தெரியும் என்று கூறி, மேற்படி ராஜரீகத்திடம் தனியார் கிளப்பிற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வரவிருப்பதாகவும், அதற்கு கிளப் வங்கி கணக்கில் அதிக அளவில் தங்க நகைகள் மற்றும் டெப்பாசிட் தொகைகள் இருந்தால்தான் நிதி வரும் என்றும், செழிய நங்கை குழுவிற்கு நிதி அளித்தால் தூத்துக்குடி ஏர்போர்ட் அருகில் மனை தருவாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். 


மேலும் 10 பவுன் தங்க நகைகள் கொடுத்தால் 30 நாட்களுக்குள் ஒரு பவுன் கூடுதலாக தருவதாகவும், ரூபாய் 1 லட்சம் பணம் கொடுத்தால் 30 நாட்களுக்குள் ரூபாய் 10,000/- கூடுதலாக தருவதாகவும் ஆசைவார்த்தைகள் கூறியதால் மேற்படி சுப்புலெட்சுமி (எ) கவிதா மீது நம்பிக்கை ஏற்பட்டு அவரிடம் ராஜரீகம் 13 ½ பவுன் தங்க நகைகளை கொடுத்துள்ளார். அதன்பின்பு நகைகளை 30 நாட்களுக்குள் திருப்பி தருவதாக சொன்ன சுப்புலெட்சுமி (எ) கவிதா 3 மாதங்களாகியும் திருப்பி தராமல் ராஜரீகத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
 

இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி ராஜரீகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகாரளித்துள்ளார். மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி வழக்கில் எதிரியான சுப்புலெட்சுமி (எ) கவிதா மற்றும் அவரிடம் இருந்து மோசடியாக பெற்ற தங்க நகைகளை தனியார் நிதிநிறுவனத்தில் அடகு வைக்க உடந்தையாக இருந்த அந்நிதிநிறுவனத்தின் மேலாளரான தூத்துக்குடி சிறுதொண்டநல்லூர், கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் வேலவன் (38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

 
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி சுப்புலெட்சுமி (எ) கவிதா என்பவர் முத்தையாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் பலரை ஏமாற்றி பணம் ரூபாய் 50,68,000/-மும் 400 பவுன் தங்க நகைகளையும் மோசடி செய்து ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/