மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட மோதிலால் தெரு பகுதியை சேர்ந்த பொங்குடி மாயாண்டி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வீட்டில் வசித்துவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணமானதை தொடர்ந்து இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இங்கு கணவன் மனைவி இருவர் மட்டும் சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று மதியம் திடீரென பொங்கொடி யின் வீட்டிற்கு வந்த இரண்டு இளைஞர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பொங்குடியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி பாண்டியம்மாள் கூச்சலிட்ட நிலையிலும், அவரையும் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் சரமாரியாக பொங்குடியை வெட்டிவிட்டு தப்பியோடினர். இதனால், இளைஞர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த பொங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, சம்பவம் குறித்து அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பட்டப்பகலில் வீட்டிற்குள் இருந்த முதியவரை இளைஞர்கள் இருவர் மனைவியின் கண் முன்பாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதி மதுரை மாநகராட்சி மேயர் வீடு உள்ள பகுதிக்கு அருகாமையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை ஏதேனும் முன் விரோதமா இல்லை ஆள் மாற்றி கொலை செய்தார்களா? என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் கரிமேடு காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக