தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆக.23ம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியருளினார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதி வழியாக வலம் வந்தது. பக்தர்கள் வடத்தை இழுத்து ஓம் சக்தி பராசக்தி என்று வானை பிளக்க கோஷமிட்டனர்.
நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர். திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் மு.வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக சுந்தரராமன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக