குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு மேல் பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காணி பழங்குடி மக்களின் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் தச்சமலை, தோட்ட மலை, களப்பாறை, முடவன் பொற்றை உள்ளிட்ட பழங்குடி குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்க வருவதற்கு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
பழங்குடியின மாணவ, மாணவிகளின் ஆபத்தான பயணம் பற்றிய விவரம் தினத்தந்தியில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி வெளிவந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்தது. அதன்படி பேச்சிப்பாறை ஊராட்சி சார்பில் தற்போது 25 மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு கவச உடைகள் (லைப்-ஜாக்கெட்) வாங்கப்பட்டன. இந்த கவச உடைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி பேச்சிப்பாறை அணை கரையில் நடந்தது. கலெக்டர் வழங்கினார்.
இதில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு பாதுகாப்பு கவச உடைகளை மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் மாணவர்களிடம் கூறும்போது, "பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும், பாதுகாப்பு கவச உடைகளை தினமும் தவறாமல் அணிய வேண்டும். அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா, பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ், துணைத்தலைவி கலைச் செல்வி, பேச்சிப்பாறை பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்னா, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யப்பன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன், சரவண பெருமாள், உடற்கல்வி ஆசிரியர் சந்திரசோமு, தச்சமலை பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலவச படகு இந்த நிகழ்ச்சியின் போது பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ் மற்றும் தச்சமலை பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் தங்கராஜ் ஆகியோர், மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனரிடம், பேச்சிப்பாறை அணையில் பழங்குடி மாணவர்கள் தினமும் ரூ.40 வரை கொடுத்து தனியார் படகுகளில் பயணம் செய்து பள்ளிக்கு வந்து சென்று வருகிறார்கள். எனவே அரசு சார்பில் இங்கு பழங்குடி மாணவ, மாணவிகளுக்காக இலவசமாக படகு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அப்போது இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக