தூத்துக்குடியில் முதல் முறையாக காவல் துறை சார்பில் "புதிய பாதை" நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி ஏற்பாடு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

தூத்துக்குடியில் முதல் முறையாக காவல் துறை சார்பில் "புதிய பாதை" நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி ஏற்பாடு.


தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட காவல்துறை சார்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து பல குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்களை அழைத்து  அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்தி நல்வாழ்வு வாழ மருத்துவர், சட்ட வல்லுநர், காவல்துறை அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைந்த குழுவின் ‘புதிய பாதை” என்ற மனமாற்றத்திற்கான வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக பல குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ மருத்துவர், சட்ட வல்லுநர், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் ‘புதிய பாதை” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (29.09.2023) தென்பாகம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பளார் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், பழிக்குப்பழி எண்ணம் மேலோங்கி இருப்பது, கோபத்தை கட்டுபடுத்த முடியாத நிலை, போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது, பய உணர்ச்சி இல்லாமை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் குற்ற செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடுபவர்களை குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக, தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காவல் நிலையங்களில் வைத்து இக்குழுவினரால் ஆலோசனைகள் வழங்கப்படும். 

மேலும் மேற்படி தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் உள்ளவர்கள், அவர்கள் மேல் உள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக மட்டுமே இந்த மனநல ஆலோசனைகள்  வழங்கப்படும். இந்த முகாம் திருந்தி நல்வாழ்வு வாழ்வதற்கான ஒரு முயற்சியாகும்.


மேலும் கடந்த 1½ வருடங்களில் நடந்த கொலை வழக்குகள், கொள்ளை வழக்குகள், போக்சோ வழக்குகள் போன்ற அனைத்து குற்ற வழக்குகளிலும் 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் முறப்பநாடு காவல் நிலைய வி.ஏ.ஓ கொலை வழக்கில் கொலை நடந்த 57 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் 2 பேருக்கும் 143 நாட்களில் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தது குறிப்பிடதக்கதாகும். இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக  100 வழக்குகள் பதிவு செய்து, 196 எதிரிகள் கைது செய்யப்பட்டு 985 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் கடந்த 28.08.2023 அன்று 2 கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டு அதில் 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 137 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மாவட்ட காவல்துறையினரால் இதுவரை 3620 ‘மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1,14,390 பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பயனாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி ரீதியான பிரச்சினைகள் பெருமளவில் குறைந்துள்ளது. மேலும் கொலை வழக்குகள் 24 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் பயனாக மாவட்டத்தில் கிராமங்களின் ஊர்தலைவர்கள், முக்கியஸ்தர்கள், ஜாதிய தலைவர்கள் தாமாக முன்வந்து தங்களது பகுதிகளில் உள்ள ஜாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்து வருகின்றனர். 


தற்போது வரை மாவட்டத்தில் 6377 ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மாவட்டம் முழுவதுமாக அனைத்து ஜாதிய அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிடும். மேலும் தாமாக முன்வந்து ஜாதிய அடையாளங்களை அழித்த பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.


அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள், தூத்துக்குடி மனநல மருத்துவர் சிவசைலம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்த 32 பேர்களுக்கு அடிப்படை மன உளவியல் குறித்தும், கோபத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்தும், போதை பழக்க அடிமைத்தனம் மீட்பு அறிவுரைகள் குறித்தும், குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் தனித்தனியாக எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினர்.


இந்நிகழ்வின்போது தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு,  தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், மத்தியபாகம் காவல் நிலை ஆய்வாளர் திரு. அய்யப்பன், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் தில்லைநாகராஜன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/