திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 செப்டம்பர், 2023

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது!


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி  திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி‌ திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சயாக தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளையில் சுவாமி, அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 


ஐந்தாம் திருவிழா அன்று இரவு 7:30 மணிக்கு குடைவருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழா அன்று காலை சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்திலும், மாலையில் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8ம் திருவிழா நண்பகல் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30  மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. முதலில் விநாயகர் தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது திரளான பக்தர்கள் 'கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' போன்ற பக்தி கோஷங்களை  முழங்கியவாறு வடத்தை பிடித்து இழுத்தனர். 


நான்கு ரத வீதிகளிலும் திரண்டு இருந்த பக்தர்களின் நடுவில் அசைந்தாடிச் சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் காலை 8 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/