தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் 88வது பிறந்த நாளையொட்டி அவருடைய முழு உருவசிலைக்கு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று (24.09.2023) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது திருச்செந்தூரில் பல்வேறு கல்வி நிறுவனங்களை பா.சிவந்தி ஆதித்தனார் நிறுவினார். பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் செய்த சேவையை பாராட்டி இவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994 நவம்பர் 23ஆம் தேதி டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் 1995ஆம் ஆண்டிலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2004ஆம் ஆண்டிலும், சென்னை பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டிலும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின, தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான கோவில் திருப்பணிகளையும் சிவந்தி ஆதித்தனார் செய்துள்ளார்.
விளையாட்டு துறையில் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தனார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2000 வது ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக பா.சிவந்தி ஆதித்தனாருக்கு கடந்த 2008ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
அவரது 88வது பிறந்தநாளையொட்டி அவரது முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் பெருமையடைகிறேன் என மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்றஉறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமணன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வகுமார், வீரபாண்டியபட்டினம் ஊராட்சிமன்றத் தலைவர் எல்லமுத்து, சிவந்தி ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட்ராமராஜ், முக்கிய பிரமுகர்கள் ராமஜெயம், திரு.உமரிசங்கர் மற்றும் திமுக ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக