மதுரையில் மாபெரும் தமிழக் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

மதுரையில் மாபெரும் தமிழக் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி.

மாபெரும் தமிழக் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, எழுத்தாளர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்பு:


மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,  தலைமையில் நடைபெற்ற "மாபெரும் தமிழ் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், "தமிழ் – தொன்மையும் தொடர்ச்சியும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பேசியதாவது:-உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும் தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்திடும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. 


மதுரை மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 4 மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஏராளமான மாணவ, மாணவியர்கள்,  இளைஞர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 8 நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளன. அதன் தொடக்கமாக, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இந்நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,  பேசினார்.


இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  பேசியதாவது:- சங்ககாலம் தொட்டு தமிழ்நாடு மாநிலம் எழுத்தறிவும், படிப்பறிவும் கொண்ட கற்றறிந்த சமூகமாக திகழ்ந்து வருகிறது. மொழியில் உயரந்த மொழிஇ தாழ்ந்த மொழி என எதுவும் இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. 1960-களில் மொழிப்பிரச்சனை தீவிரமானபோது ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்கள் அன்றைய  மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய தமிழ் சங்க இலக்கியங்களில் அவற்றை உருவாக்கிய எழுத்தாளர்களுள் 40 பெண் எழுத்தாளர்கள் இருந்துள்ளனர். 


இது வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. "ஆணுக்கு பணிவிடை செய்வதே பெண்ணின் கடமை" என்ற நோக்கத்தை வலியுறுத்தியே சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் உள்ளன. "நீதி தவறியது மன்னனே ஆனாலும் எதிர்த்து போராடும்" நோக்கத்தை வலியுறுத்துகின்ற கண்ணகி போன்ற தீரமான பெண் கதாபாத்திரங்கள் தமிழ்மொழியில் உள்ளன. நமது தமிழ்ச் சமூகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுத்தறிவும், படிப்பறிவும் பெற்று கற்றறிந்த சமூகமாக வாழ்ந்தோம் என்பதை கீழடி அகழ்வாய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களின் ஆய்வின் அடிப்படையில் நாம் அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு தமிழ் சொற்கள் இன்றளவும் சாமானிய மக்களின் பேச்சு வழக்கில் உள்ளது தமிழ்மொழியின் சிறப்பு. திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கு வாழ்வியல் நெறிமுறைகளை கற்பிக்கின்றன.


சங்ககாலம் முதல் நிலப்பரப்புகளாக பிரிந்திருந்தாலும் தமிழ்மொழி உணர்வால் நம்மை ஒன்றிணைத்துள்ளது. பழம்பெருமை பேசுவதற்காக அல்ல நம்மிடம் உள்ள மேன்மைகளை நாம் கொண்டாடும் போது நம் மனதில் நம்மையும் அறியாமல் உள்ள கீழ்மைகள் தானாக ஒழியும் என எழுத்தாளர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன்  பேசினார்.


இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் உயர்கல்வி தொடர்பான வழிகாட்டு கையேடு வழங்கப்பட்டது. மேலும், கல்விக் கடனுதவி பெறுதல், சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அரசு மானியத்துடன் கூடிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.


இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்தவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜமோகன்  உட்பட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர் பெருமக்கள்  பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/