திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கே.குரும்பபட்டியில் அகோர வீரபத்திரர், ராவணேஸ்வரர், கருக்காளியம்மன், கெப்பாயியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் ஆடித்திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்குச் சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து இன்று சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன்பாக அமர்ந்தனர்.
அதனைத்தொடர்ந்து கோவில் பூசாரி ஆணி அடித்த காலணி அணிந்து ஆசி வழங்கினார். அதன் பின்னர் கோவில் முன்பாக வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். அதனைத்தொடர்ந்து கோவில் பூசாரி பக்தர்கள் அனைவரையும் சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். சாட்டையடி பெற்று நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமியை வழிபாடு செய்தனர்.
இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக